Saturday, May 18, 2024

ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்-முல்லைத்தீவு ஊடக அமையம் !

Must read

கொழுப்பில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட  மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த  கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்

நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலகுமாறு  வலியுறுத்தி மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
.
அந்தவகையில் 09.07.2022 அன்று பாரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டத்தினை மேற்கொண்ட  நிலையில் மக்கள்  ஜனாதிபதி மாளிகையினை தம்வசப்படுத்தினர் அதனை தொடர்ந்து 09.07.2022 அன்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  மாளிகைக்கு முன்னால் செய்தி சேகரிப்பிற்காக சென்ற  ஊடகவியலாளர்கள்  பலர் கொடூரமான முறையில் பொலிசாராலும்,விசேட அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடக வியலாளர்கள் மீதான  இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை பாதுகாப்பு தரப்பினராலும் அரச ஆதரவு குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி அதன் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அத்தோடு மக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்பில் அறிக்கையிட சென்ற வேளை தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள சகோதர ஊடகவியலார்களுக்கு இந்த நேரத்தில் வடக்கிலிருந்து நாம் எமது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

இலங்கை நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செய்தி அறிக்கையிடல் செயற்பாட்டிற்கு ஆட்சியில் வரும் அரசாங்கம் வழி செய்து கொடுக்க  வேண்டும் என கோரி நிற்கிறோம்

கடந்த காலத்தில் பல ஊடகவியலாளர்கள்  கொலை செய்யப்பட்டும் வலுக்கட்டாயமாக கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுமுள்ளனர் அரசாங்கத்தின் ஊழல்கள் பிழைகள் அரசுக்கெதிரான மக்கள்  போராட்டங்கள் என்பவற்றின் உண்மைகளை  அறிக்கையிடும் போதே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன   வடக்கு  கிழக்கில் இவ்வாறான அறிக்கையிடல்கள்  மனித உரிமை  செயற்ப்பாடுகளை முன்னெடுத்த ஊடகவியலாளர் தொடர்ந்து தாக்கப்பட்டும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெற்கில்  அது விஸ்பரூபம் எடுத்துள்ளது

இந்த சம்பவங்கள் ஒன்றை  தெளிவாக  உணர்த்துகிறது. அரசின் ஊது குழலாக அன்றி அரசினது ஊழல் செயற்பாடுகள் அரசுக்கெதிரான போராட்டங்கள் போன்றவற்றின்  உண்மைகளை  வெளிக்கொண்டு வந்தால் உங்கள் மீது தாக்குதல் நடக்கும்  என்று.அரசு உணர்த்த முற்ப்படுகிறது   இலங்கையில் கடந்த காலங்களிலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ,அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அதற்கான சரியான நீதி விசாரணைகள் உரிய தரப்பினால் முன்னெடுக்கப்படாமையே இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் நிலைக்கு காரணமாக இருந்து வருகிறது .

முல்லைத்தீவு ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு தரப்பினராலும் அரச ஆதரவு குழுக்களினாலும் காலத்திற்குக்காலம் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும்  உள்ளாக்கப்பட்டு வருபவர்கள் என்ற வகையில் இத்த வலியை நாம் நன்கு அறிவோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தப்பித்து விடுகின்றனர்.  இதற்கு சரியான நீதி விசாரணைகள்  முன்னெடுக்கப்பட வேண்டும்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீது அரச பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்டுவரும் சாவு மணியாகும். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டிய தேவையை இந்த சப்பவம் உணர்த்தியுள்ளது

ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு விளைவிக்கும்,அச்சுறுத்தல் மேற்கொள்ளும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அரச பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான தொடர் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரிய தரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும், சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article